புதன், 13 செப்டம்பர், 2017

மனசாட்சி (2)...

பசியால் வாடிய 
வயிற்றின் கண்முன்னே 
வளியவன் உண்டதில்,
வீழ்ந்தது மனசாட்சி...

சாலை விபத்தினில் 
சிந்திய உதிரத்தில்,
உதவாது சென்றதில்,
வீழ்ந்தது மனசாட்சி...

உரிமை இழந்தவன்,
அழுகுரல் கேட்டினும்,
செவிடனாய் வாழ்ந்ததில்,
வீழ்ந்தது மனசாட்சி...

தம்பிள்ளை வாசிக்க,
ஊர்ப்பிள்ளை வீசியசெய்தி,
தாளினை வாசிக்கையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

பிறர்கூறும் சொல்கேட்டு,
பொய்புரட்டை எண்ணாது,
புறம்பேசிய நாவினில்,
வீழ்ந்தது மனசாட்சி...

மனைவியின் சொல்கேட்டு, 
பெற்றோரை புறந்தள்ளும்,
பிள்ளையின் செய்வினையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

கல்விக்கு விலைவைத்து,
காசுக்கு விற்றிட்ட,
கயவரின் வஞ்சனையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

வாக்கிற்கு பணம்வாங்கி,
வஞ்சகரை தேர்ந்தெடுத்த,
கறைபடிந்த கைகளில்,
வீழ்ந்தது மனசாட்சி...

காதலை பேணாது,
சாதிய கொலைசெய்யும்,
சாக்கடை புழுக்களால்,
வீழ்ந்தது மனசாட்சி...

பெண்ணியம் போற்றாது,
ஆண்மகனாய் வாழாது,
பெற்ற வரதட்சணையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

கடமையை மறந்திட்டு,
கண்மூடி விலைபேசி,
சன்மானம் கேட்டதில்,
வீழ்ந்தது மனசாட்சி...

நோயுற்ற மனிதரை,
காக்கின்ற சேவைக்கு,
விலைவைத்த மருத்துவரில்,
வீழ்ந்தது மனசாட்சி...

பேருணர்வினில் எழுதிட்ட,
கவிதையை நுகராமல்,,
கடக்கின்ற மூடரால்,
வீழ்ந்தது மனசாட்சி...

எங்கே தேடுவேன்,
வீழ்ந்த மனசாட்சியை...???
எப்படி எழுப்புவேன்,
வீழ்ந்த மனசாட்சியை...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக