திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ஆதிவாசி!!!

இந்த காடே எங்கவீடு,
இதில் காட்டு எல்லைக்கோடு...
பிரிச்சி பாக்குற பழக்க வழக்கம்,
ஆதிவாசிக்கு இல்லையடா...
பட்டா போட்ட நெலத்துல வாழ,
பாவி மனசு பதறுதடா...
வவுத்து பசிய போக்க இங்க,
தேனும் திணையும் இருக்குதுடா...
தப்பு தண்டா செய்யச் சொல்லுற,
பசிதான் வத்தி கெடக்குதடா...

இது ஆதியில் பொறந்த கூட்டம்,
ஆதாம் ஏவாள் போட்ட தோட்டம்,
சாதியும் சமையமும் எங்களுக்கில்ல,
காடே எங்க சாமியடா...
பாட்டன், பூட்டன், சொல்லித்தந்தது,
மண்ணு, மானம், வீரமடா...
பேரப்புள்ளைங்க, பழகிப்பாத்தது,
வில்லும், வேலும், கம்புமடா...
உங்க தோட்டா கொண்டு மாரதொளப்பது,
எப்படி வீரம் ஆகுமடா...???

ஏட்டு  கல்வி எதுக்கு...???
இந்தக்காடே பள்ளியா  இருக்கு...
ஒவ்வொரு நாளும் பாக்குற விசயம்,
மனசுல பாடமா பதியுதடா...
நாட்டுல பொறந்த நரிங்க கூட்டம்,
காட்டபிரிப்பது சூழ்ச்சியடா....
காட்டுல மேட்டுல திரியுரகூட்டம்,
களைச்சி போனது இல்லையடா...
இந்த காட்ட விட்டு வாழநெனச்சா,
கனவிலும் உசுரு போகுமடா...
எங்க கனவிலும் உசுரு போகுமடா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக