வியாழன், 4 அக்டோபர், 2018

படைப்பாளி...

கதை,
கவிதை,
பாடலென,
அனைத்தும்,
அறுவடை,
செய்யும்,
விவசாயி...

வாசகன்....(2)

கவிதை,
காடுகளில்,
தொலைந்த,
அர்த்தங்களை,
கண்டெடுக்கும்,
துப்பறிவாளன்...

செவ்வாய், 2 அக்டோபர், 2018

மீசை...(6)

முகத்தில்,
பதியமிட்ட,
கரும்புல்...

திங்கள், 1 அக்டோபர், 2018

வாசகன்!!!

தாழிட்ட இமைகதவு
திறக்காதா???
தாய்மொழியை நாவள்ளி,
சுவைக்காதா???

தடம்புரண்ட கற்பனைகள்,
இணையாதா???
தரணியெல்லாம் புதுக்கவிதை,
பொழியாதா???

புத்துணர்வை மனமெல்லாம்,
உணராதா???
புத்துயிராய் பூமியெல்லாம்,
பிறக்காதா???

இன்றோடு இத்தேடல் 
முடிந்திடுமா???
இச்சென்மம் முடியும்வரை,
தொடர்ந்திடுமா???

தாய்மொழியை சுவாசிக்க,
தடைகளுண்டோ???
தடுத்திடுவார் தலையறுப்போம்,
விடைகளன்றோ...

வாசிக்க ஏனிந்த,
காத்திருப்பு???
வாசகராய் வாழ்ந்துவிடு,
தனிச்சிறப்பு!!!

வெளிச்சம்!!!

விஞ்ஞான,
வீட்டிலே,
அகல்விளக்கு!!!

நொடிப்பொழுது!!!

வாழ்வில்,
நொடிந்தவரை,
கேளுங்கள்,
ஓர்நொடியின்,
அருமை,
தெரியும்...

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மீசை...(5)

வகுடெடுத்து,
தலைசீவி,
பூவைக்கும்,
கார்க்கூந்தலினும்,
மேலானது,
விரல்கட்டு நாற்றை,
பற்றி சுழட்டும்,
ஆணின் சிறுதிட்டு,
மீசை...

சனி, 29 செப்டம்பர், 2018

மீசை...(4)

இதழ்களை,
தைக்கும்,
மோகமுள்...

மீசை...(3)

முத்தத்தை,
ஊக்குவிக்கும்,
காமஊசி...

மீசை...(2)

மெல்லினமும்,
வல்லினமும்,
நீண்டே இருப்பதால்,
வெட்ட வெட்ட,
நீண்டுகொண்டே 
இருக்கிறதோ,
யாரறிவார்???

மீசை...

மூன்றாம்பிறை மேலுதட்டில்,
பயிர்களேனோ துளிர்க்கவில்லை...
முகக்காட்டில் தேடிப்பார்த்தும்,
விடைகளேனோ தெரியவில்லை...

பருவநீர் வார்க்கும்வரை,
காத்திருக்க வேண்டுமா???
கரடுகளில் உயிரூட்ட 
உரம்போட்டால் தீருமா???

அணிகலனில்லா ஆண்களுக்கு,
இயற்கையின் ஆபரணமா???
காளைகளின் திமில்பிடிக்கும்
வீரத்தின் அடையாளமா??

காத்திருப்பேன் நான்...
காத்திருப்பேன் நான்...
விதையுடைத்து,
உயிர்தெழுந்துவா...

துளிர் மீசையோ???
கட்டை மீசையோ???
முறுக்கு மீசையோ???
நரைத்த மீசையோ???
பாரதியாக ஆசையெனக்கு...
மீசையிலாவது...!!!
அவன் மீசையிலாவது...!!!

வியாழன், 27 செப்டம்பர், 2018

மரகதக்கால்!!!

என்ன அழகடா???
கடற்கரையில் முதன்முதலாய்,
அவள் கால்கள் நடக்கையில்....

மணல்  உள்வாங்கி முதல் முத்தமிட்டது...
பூமாதேவியே சற்று கிறங்கிப்போனாள்...

கோபங்கண்ட பேரலையோ? 
கால்களில் தழுவி மணலை விரட்டியது...
கடல் ராசாவாயிற்றே!!!

வாயுவும் தன் பங்கிற்கு, சூறைக்காற்றாய்,
கால்களை சுற்றி மணலை சுழற்றி போட்டான்...
வாயுவும் ஆண்மகனே!!!

வானமும் நெருப்பும் பாவம் செய்தவர்கள்...
தீண்டாமை குறை அன்று தீயிற்கு தெரிந்தது...
தலைமேல் நிற்கும் அகங்காரம் வானுக்கு புரிந்தது...

என்ன வியப்படா...???
பூமிக்கும், நீருக்கும், காற்றுக்கும், 
வந்த சோதனை????
இவர்கள் ஒற்றுமை, 
ஒவ்வோர் காலடியில் 
காணாமல் போயிற்றே!!!!

பஞ்சபூதமும் கொஞ்சதூண்டிடும்,
மனிதக்கால்களா இவை???
இல்லை இல்லை மரகதகால்கள்....
அவை மரகதகால்கள்...
உன்னடி காண...  
வாடி ராசாத்தி...
                - ஜெகதீசன் பிரபாகரன் 

புதன், 26 செப்டம்பர், 2018

சொல்ல விரும்பவில்லை...

அந்திசாயும் நேரமொன்று,
அரிதாரம் பூசினின்று,
காய்ந்தவயிற்று கோலமென்று,
இரைதேடும் கிளிகளிங்கு...

பசித்த பருந்தொன்று,
பட்டென வந்துநின்று,
சொல்லும் விருந்தென்று,
களவாடும் பசிகொண்டு...

கூக்குரலிடுவோர் உளரோ???
குறைதீர்ப்போர் உளரோ???
சங்கமிலா கூட்டமொன்று,
சகதியில் கலந்த நன்னீராய்...

இனமொன்று வாழுதடா இந்நாட்டில்,
பெயர்கூட சொல்லுதடா பண்பாட்டில்,
"மொழி" முதலெழுத்தா???
அவள் தலையெழுத்தா???
நாவில் நீண்டொலித்தா???
சீதை சிதிலமடைந்து சேர்ந்தபின்,
உறைந்ததடா அவள் உதிரம்,
பெயர்சொல்லி அழைத்தபின்...
பெயர்சொல்லி அழைத்தபின்...  

சனி, 11 ஆகஸ்ட், 2018

தூய்மை....


எழுதிய,
காகிதம்,
கறையாகி,
சொன்னது,
முதல்,
விமர்சனம்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

#தூத்துக்குடி...

இது தமிழ்நாடா??? 
இல்லை சுடுகாடா???
காட்டுமிராண்டி கூட்டத்திற்கு,
காவலென்று ஒருபெயரா???
பிச்சையெடுக்கும் நாய்களுக்கு,
துப்பாக்கி ஒருகேடா???
பிணமாக வாழ்வதற்கு,
வளமான தமிழ்நாடா???
வாய்க்கரிசி தந்துவிட்டு,
அனுப்பியது சுடுகாடா???
நேற்றுவரை வீசிய காற்றில் 
#Copper நெடி. 
சுவாசித்த மக்களுக்கு கூடுதலாய்,
துப்பாக்கிநெடி

நேற்று மெரினா...
இன்று தூத்துக்குடி...
நாளை சேலமோ??? 
தேனியோ???
இல்லை முழு தமிழகமோ???
வடிந்த ரத்தம் உறையுமா???
பத்து லட்சம் நிவாரணமா???
இது தமிழ்நாடா???
இல்லை சுடுகாடா???

வெள்ளாடை...

அணிந்த 
அனைவருக்கும் 
பெருமை 
அளித்தாய்...
குங்கும 
கரையற்ற 
மங்கையை 
தவிர...
வெண்மையே, 
பிடிக்கவில்லை.
நீ அடக்கிய,
வர்ணங்களை,
அவள்மீது 
அவிழ்த்துவிடு,
வெண்கறைகள்,
மறையட்டும்...
வர்ணங்கள் 
பிறக்கட்டும்...

#நாட்டுப்புறப்பாட்டு

தலையில்  வெச்சபானை 
வெண்ணையும்  ததும்பி,
முகமொத்தம்  வழிய,
என்ன அழகியடி...
நீதான் என்ன அழகியடி...

இடையில் வெச்சகுடம்,
ஏகாந்த வார்த்தையில்,
வாய்விட்டு சொல்லுது,
என்ன அழகியடி....
நீதான்  என்ன அழகியடி... 

கொண்ட சேவல் போல,
சங்கு கழுத்துல,
சத்தம் உசுப்புதடி....

கெண்டக்காலு ரெண்டு,
எட்டி குதிக்கையில்,
நெஞ்சு தெறிக்குதடி....

பருத்தி சேலை கட்டி,
பவழமல்லி ஒன்னு,
பட்டுனு ஓடுதடி....


#மீள்எழுச்சி....

எதிர்காலமே இருள் ஆகுதே,
வளமயாவுமே விலை போகுதே...
எதிர்ப்போமடா எமன் ஆயினும்...
முன்னேறி நீ வாடா,
முடி சூடடா...

வளராமலே பிறை தேயுதே,
வணங்காமலே முடி ஆளுதே,
உயிர்யாவிலும் அனல் கூடுதே,
முன்னேறி நீ வாடா,
முடி சூடடா...

துயரம்...
துயரம்...
காக்கும் காவல்
கல்லறை குழியில்,
நமைசேர்த்ததேன்????

விடியும்...
விடியும்....
விரல் மையை தீண்டி,
வாக்கை மாற்று,
கரைசேருவோம்....

அம்மா... பிள்ளை....

அம்மா...
கருவில் வளரும் காதல் கீற்று,
மனதை மயக்குதே...
மயங்கும் மனது உறங்கிடாது,
மழலை  ரசிக்குதே....
விரைந்து வளர்ந்து உலவ வா வா...
மடியின் மீது தவழ வா வா...
கண்முன்னே... சில விண்மீனே...
கண்மூடி நான் தூங்க கைசேருமோ???

பிள்ளை...
என் உருவம்  உதிரம் உனதுநிழலே ,
நானும் தோன்றினேன்...
உன் இதயம் எழுப்பும்  இசையை கேட்டு,
நாளும் தூங்கினேன்...
வெளி உலகம் காண ஏக்கமில்லை...
சிலகாலம் தானே கருவின் எல்லை...
கண்முன்னே, என் விண்மீனே...
கண்மூடி நீ தூங்கு கைசேருவோம்...

அம்மா...
மானும் மயிலும் ஓடும் ஆடும்,
மாலை நேரமே....
மயங்கிடாது குயிலும் கூவும்
மாரிஜாலமே....
கிளிகள் பேசும் இரவில் கொஞ்சம்...
கேட்கும் நூறு இசைகள் நெஞ்சம்...
கண்முன்னே... சில விண்மீனே...
கண்மூடி நான் தூங்க கைசேரவா....

பிள்ளை....
மானின் ஓட்டம் மயிலின் ஆட்டம்,
நானும் காண்கிறேன்...
மயங்கிடாது குயிலின் இசையை,
ரசித்து கேட்கிறேன்...
உனது பேச்சு கிளியை மிஞ்சும்...
உனது சுவாசம் வசந்தம் என்றும்...
கண்முன்னே... நீ விண்மீனே...
கண்மூடி நீ தூங்க தாலாட்டுவேன்....

எழுதுகோல்...

என்  அங்கம்  செதில் 
செதிலாய்  சிதைந்தாலும் 
காகிதத்தில் மரண 
வாக்குமூலம் எழுதுகிறேன்..

தாள் பிடித்து எழுதிய,
கரங்கள் எல்லாம்,
என் தலை பிடித்து,
சீவிக்கொண்டே இருந்தன.

ஒவ்வொரு சீவலுக்கும்,
ஒருபக்க கதை, கவிதை, 
கட்டுரை, வரைவுயென  
விரைந்து கொண்டே இருந்தேன்.

கிறுக்கல்களாய் நேராயின,
பிஞ்சு கரங்களுக்கு.
நடுக்கங்கள் உண்டாகின,
வயோதிக கைகளுக்கு.

இவ்வுலகில் தோன்றிய 
அணைத்து படைப்புகளையும்,
முதலில் படித்தவன் நான்.
மற்றவர்க்கு தாளில் வடித்தவன் நான்.

ஒவ்வொரு முறையும்,
அங்கம்  சீவச்சீவ வடிந்த 
என் உதிரத்தில் வரலாற்றை,
எழுதிக்கொண்டே போகின்றேன்.

நானே மறுமுறை பிறந்து,
மாற்றி எழுதுகிறேன்.
நானே மீண்டும் பிறந்து,
புதியன படைக்கிறேன்.

சட்டங்களில் உள்ள 
கையொப்பமும் நான்.
கவிதைகளில் 
முற்றுப்புள்ளி நான்.

அனைவரின் தலைவிதியை,
உருவாக்குபவனும் நான்.
சிலரின் தலைவிதியை,
மாற்றி எழுதுபவனும் நான்.

பாமரனின் கையோ?
படைத்தவனின் கையோ?
அடிமையின் கையோ?
ஆள்பவனின் கையோ?
பேதமில்லை எனக்கு.
எழுதுவதே இலக்கு!!!

நிலமங்கை...

பகலவன் சாயும் பொழுது,
பறக்கையில் அசையா சிறகு,
வரையாத  வெற்றிட காகிதம்,
தீட்டாத வானவில் வர்ணம்,
மங்கையின் நாவிதழ் நடனம்.
சொற்களின் இடையே மௌனம்,
நீள்கின்ற தலையணை முணுகல்,
சட்டென்று உடையும் மொழிகள்.
வளையாது செல்லா நதிகள்,
உப்பாகும் சேர்கின்ற கடல்கள்,
வான்மீது மிதக்கும் முகில்கள்,
வயல்மீது தெளிக்கும் துளிகள்.
வானத்தை தொடுகின்ற அரண்கள்,
அதனுள்ளே ஊற்றெடுக்கும் குமிழிகள். 
பறவைகள், பட்சிகள், விலங்குகள்,
பிடித்து கதைவடைத்த மனிதர்கள்.
திமில் பிடித்த கைகளில்,
திரை நீக்கி காண்கிறேன்,
இவையாவிலும் நீயே அழகு...
நிலமங்கை அழகு...

#உடன்பிறப்பே!!!

#உடன்பிறப்பே!!!
ஓய்வறியா சூரியனே,
ஓலைக்குடிசை நாயகனே...
இயல்தமிழ் கொற்றவனே,
இசைத்தமிழ் வித்தகனே,
முப்பாலை உலகறிய 
ஊட்டிவிட்ட வள்ளுவனே...
சொல்லாற்றல் அரசனே,
சுயமரியாதை உற்றவனே...
அஞ்சுகம் பெற்ற  அகல்விளக்கே!
அண்ணாவின் விடிவிளக்கே.
சாக்கடை அள்ளியவனுக்கு,
சமத்துவபுரம் தந்த பெரியாரே... 
பலமுறை தோற்ற காலனுக்கும்,
இம்முறை ஏன் பரிசளித்தாய்???
அயர்ந்து கண்ணுறங்கு தமிழே!!!...
உன்நாவிற்கு  நான் அடிமை...
அத்தமிழே உனக்கடிமை...
அத்தமிழே உனக்கடிமை...

#கலைஞர் #இலவச #மின்சாரம்...

#கலைஞர் #இலவச #மின்சாரம்...
உன்னால் உயிர்பெற்ற
நெல்மணிகள் கதறுதடா...
வாய்க்கரிசி ஆனதென்ன
கொடுமையடா....

#கலைஞர் #தரம்.

#கலைஞர் #தரம்.
கலைஞர் மறைந்ததை,
கம்பீரமாய் சொன்னது,
அவர்  அளித்த,
தொலைக்காட்சிப்பெட்டி...

திங்கள், 26 மார்ச், 2018

மொழிப்போர்!!!

போர் போர்,
தமிழ் மொழிப்போர்...

தமிழ் உரைப்போர்,
தினம் சுவைப்போர்,
மனம் திகைப்போர்,
புது மொழிப்போர்..

மொழி திணிப்போர்,
தலை உடைப்போர்,
மனம் துடிப்போர், 
இது மொழிப்போர்..

கலை வளர்ப்போர்,
கவி வடிப்போர்,
கடல் அளப்போர்,
முது மொழிப்போர்...

போர் போர்,
தமிழ் மொழிப்போர்...

மய்யம்....

பூவின் மீது தூவும் தூறல்...
பூக்கள் கொய்யுமா???
தேனை தேடி தீண்டிடாது,
ஈக்கள் மொய்யுமா???
உயிரின் ஓசையா???
இவை உளறல் பாஷையா????
உறங்கும்...
உறங்கும்...
நதி மடியில் விழுந்து,
இரவில் வெண்ணிலா....
இனி இமைத்திடாத 
விழிகள் எண்ணிலா???

புதன், 14 மார்ச், 2018

தமிழ்...

துருவங்கள் திசைமாறும்,
மகுடங்கள் சிரம்மாறும்,
நீர்த்தடங்கள் தடம்மாறும்...
எரிமலைகள் உருமாறும்...

மாகாணம் கடலாகும்...
பூகோளம் புதிதாகும்...
புவிஆண்ட மொழியாகும்...
மீட்சியுற புயலாகும்...

கவியரங்கம் உருவாகும்...
கலையனைத்தும் புதிதாகும்...
கவிஅனைத்தும் கடலாகும்...
நகரனைத்தும் விரிவாகும்...

மாற்றங்கள் நிலையாகும்,
ஆயின்மொழியெங்கள் மூச்சாகும்...
வித்தாகும்  விளக்காகும்
தமிழ்மொழியெங்கள் உயிராகும்....

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

Android பெண்ணே !!!

Android பெண்ணே Apple கண்ணே
என்னை கொஞ்சம் பாரு...
Angry bird ஆய் நீயிருக்க 
reason சொல்லு யாரு???

உன் facelook கொஞ்சம் மாறனும்...
அது facebook வாலில் சேரனும்...
பல like  & comment  இல் 
server  எல்லாம் hang  ஆகணும்...

உன் dressing style மாறனும்...
புது trend  set  ஆகி போகணும்,
அதை உன்பேர் சொல்லி,
shopper  stop இல் offer  போடணும்.... (Andriod பெண்ணே... )

ஒரு சிறு குறு புன்னகை...
எனை பார்த்ததும் மறையுதே...
விழி மாற்றியே திரும்பிட...
எனோ மீண்டும் பூக்குதே....

தினம் விழும் ஒளி பார்வையாய்...
விழும் மழை துளி கோர்வையாய்...
புது வானிலை மாற்றமாய்...
இவன் மனநிலை மாறுதே....

அடி நீ தான், மயில் தூரிகை...
ஏழ் வர்ணம் தீட்டிய காரிகை....

வரவேற்பு....

புயலாய் ஒரு வானிலை மாற்றம்...
புதிதாய் சிறு வானவில் தோற்றம்....
அழகாய் அடி மனதினில் சாரல்...
மெதுவாய் விழி பேசிடும் காதல்...
பெரிதாய் ஒரு புன்னகை பூக்கும்...
வழியாய் சில வெட்கமும் தாக்கும்...
இவை அழகியல் மாற்றமா....???
இல்லை ஆழ்நிலை மாற்றமா...???
விரியும் இரு சிறு சிறகுகள்...
இணைந்தே விரியட்டும் உறவுகள்...
வாழ்த்திட விரைந்தே வாருங்கள்....

மீள்வாய் தமிழினமே!!!

மேற்கே சூரியனே...
மீள்வாய் சந்திரனே...
சிறைகள் ஒவ்வொன்றும் 
தவிடாய் தவிடாய்...
ஆள்வது அயலானே...
அடிமை தமிழினமே...
புதிதாய் உயிர்த்தெழுவாய் 
எழுவாய்...
நீதிக்கு சாய்வதெல்லாம்...
நம் தலையல்லவா....
நீங்காமல் கேட்கின்றோம்,
அழு குரலல்லவா???
அயலாரின் ஆட்சிக்கு 
வழிவிட்டோமே....
அற்பமாய் வாழ்ந்திங்கு,
கதறிட்டோமே...
தடைகள் எல்லாம்,
நம்முன்னே சிறுபுழுவாய்...
விலகும் விலகும்,
நிற்போமே அணிபடையாய்...
 உரிமைகள் விலைபோக,
கேளிக்கை ஒருகேடா???
வளமெல்லாம் இழந்தபின்,
வாழ்வதற்கு ஒருநாடா???
வீணாக உறங்கிட்டால்,
மீளா பிழையாகும்...
வீதிக்கு நீவாடா,
விரைந்தே விதிசெய்வோம்...
இனமொன்றை காத்திடவே,
புறப்படு என்னோடு...
புலிஆளும்  குகையில்,
நரி வாழ்வதாகாது...
எழுவாய், விரைவாய்,
துணிவாய்,  இன்றே...
தடுப்பார், நினைத்தால்,
தடுப்போம், கொன்றே....