செவ்வாய், 12 டிசம்பர், 2017

#RealIndiaThalaivarStyle

தோட்டத்துல வீடு கட்டி பாத்திருக்கேன், பாத்திருக்கேன்...
எரிக்குள்ள வீடுகள் கட்டிய பட்டணம் பட்டணமே...
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி ஆறுகள் காணாம போயிடுமே...
தோட்டத்துல வீடு கட்டி பாத்திருக்கேன், பாத்திருக்கேன்...

சிங்காரமா ஊரு, இது சென்னை இன்னு பேரு...
ஊரசுத்தி பிளாட்  போட்டு வித்தான் பாரு...
சிங்காரமா ஊரு, இது சென்னை இன்னு பேரு...
நாள்முழுக்க டெங்கு கொசு கடிக்கும் பாரு...
பச்சப்புள்ள தீக்குளிக்கும் கந்துவட்டி கொடுமைடா...
கார்டூனுல படம்வரைஞ்சா உள்ள தள்ளும் அரசுடா...
வேளச்சேரி மடிப்பாக்கம், நங்கநல்லூர் ஏறிடா...
குப்பைகொட்டி மேடாக்கி பிளாட்கட்டுன பாவிடா...
இன்னும் கதையை சொல்லட்டுமா???
குப்பைய கூடையில் அல்லட்டுமா???
சொன்னது ஒன்னு, செஞ்சது ஒன்னு,
ஓட்டுக்கு காசுநீ வங்காதண்ணே...

சிங்காரமா ஊரு, இது சென்னை இன்னு பேரு...
LKG க்கு லட்சம் ரூபா கேப்பான் பாரு...
சிங்காரமா ஊரு, இது சென்னை இன்னு பேரு...
தெர்மாக்கோலில் அணையமூடி வெப்பான் பாரு...
கட்டைவண்டி களத்துமேடு வங்கி வாசலில் நின்னுருச்சி...
கஷ்டப்படும் ஏழை நோட்டு செல்லா காசா ஆயிருச்சு...
சாக்கடைய அள்ளுறவன், வருஷமெல்லாம் கெட்டவண்டா..
தண்ணியில கைவெச்ச போலீஸ்காரன் நல்லவண்டா???
இன்னும் கதையை சொல்லட்டுமா???
குப்பை கூடையில் அல்லட்டுமா???
சொன்னது ஒன்னு, செஞ்சது ஒன்னு,
ஓட்டுக்கு காசுநீ வங்கதாண்ணே...




#GaanaSong

துட்டு துபானி...
கெடச்சா அம்பானி...
இல்லனா பேமானி...
போடா சர்தானி...

துட்டு துபானி,
கெடச்சா அம்பானி,
இல்லனா பேமானி...
போடா சர்தானி...

பர்ச வெக்க பாக்கெட் இல்ல பங்கு பங்கு...
பத்துநாளா பாட்டிலுக்கு சங்கு சங்கு...
கிழிஞ்ச ஜோபியில 
நிக்காதுடா சில்லறை...
காசத்தேடி போக,
வாழ்க்கை முடியும் கல்லறை...

துட்டத்தேடி ஓடாதடா...
தூக்கம்கெட்டு சாகாதடா...
வாழ்க்கை போன வராதுடா... (துட்டு துபானி...)

கந்துவட்டி...

காரிருள் 
மேகம் சூழும்,
கழுத்தை 
பிடிக்க பார்க்கும்.
வெறுமை
மெல்ல புகைக்கும். 
வேற்றுமை 
புகைந்து வலுக்கும்,

நிழல்கூட 
நில்லாது விலகும்,
நிம்மதி 
அடியோடு இழக்கும்,
சில முகங்கள் 
முகத்திரை மாறும்,
சில  முகத்திரை 
முட்டிக்  கிழியும்,

நொடிகள் 
கடக்க யுகங்களாகும்,
நிமிர்நடை 
நொடிந்து போகும்.
இதழ்கள் 
திறக்க மறுக்கும்.
இமைகள் 
மிரண்டு திறக்கும்.

கால்கள்,
நில்லாது பறக்கும்,
கரங்கள்,
உதவாது விரிக்கும்.
கண்கள்,
காணாது சிவக்கும்.
செவிகள் 
கேளாது மடுக்கும்.

உறக்கம்,
தொலைந்தே போகும்,
உண்மை 
உறைந்தே சாகும்,
ஊர்மெச்ச,
வாழந்த உள்ளத்தில்,
உயிர்பயம்,
புற்றாய்  வந்துசேரும்.

செல்வம்,
காணாது போகும்,
மக்கள்,
தெருவோரம் சேரும்,
ஈட்டிய 
பெயரும் மண்ணாகும்,
எல்லாம்,
வட்டிக்கே ஈடாகும்...

கந்துவட்டி...
நமக்கெல்லாம்,
கல்லறை வழிகாட்டி...
கந்துவட்டி...
நமக்கெல்லாம்,
கல்லறை வழிகாட்டி...

வெள்ளி, 20 அக்டோபர், 2017

தீபாவளி...

ஆயிரம் பேர் வெடித்து,
வீசிய குப்பையை,
நான்கு பேர் அள்ளும்,
அவலம்...
தீபாவளி 
அள்ள அள்ள 
தீராவலி...

செவ்வாய், 17 அக்டோபர், 2017

பட்டாசு... (குழந்தை பாடல்)

வெடிக்குது பார், வெடிக்குது பார்,
பட பட பட்டாசு வெடிக்காது பார்...
பொறிக்குது பார், பொறிக்குது பார்,
மத்தாப்பு கம்பி பொறிக்குது பார்..
தூவுது பார், தூவுது பார்,
பூத்தொட்டி வெளிச்சம் தூவுது பார்..
சுத்துது பார், சுத்துது பார்,
சங்கு சக்கரம் சுத்துது பார்...
பறக்குது பார், பறக்குது பார்,
ராக்கெட் மேலே பறக்குது பார்...
அளவாய் பட்டாசு வெடிப்போமே...
அன்புடன் சிரித்து மகிழ்வோமே...
வெடித்ததும் மரக்கன்று நடுவோமே...
காற்றின் மாசை குறைப்போமே...

திங்கள், 16 அக்டோபர், 2017

இல்லச் சமத்துவம்...

உண்ணும் உணவு  பொதுவென்பார்,
சமையலறை எச்சங்கள் உனதென்பார்...
உடுத்தும் துணிமணி  பொதுவென்பார்,
உடுப்பை துவைத்தல் உனதென்பார்...
வீட்டின் சுத்தம் பொதுவென்பார்,
கூட்டலும் துடைத்தலும் உனதென்பார்...
பெற்ற பிள்ளை பொதுவென்பார்,
பேணிவளர்க்கும் கடன் உனதென்பார்...
பிள்ளை கடமை பொதுவென்பார்,
நோய்பிணி தொடுத்தால் உனதென்பார்...
இல்லத்தரசிகள் என்றுரைப்பார்...
இல்லத்தடிமைகள் எனநடப்பார்...
போதுமடி பெண்ணே 
தாலிக்கு தலைகுனிந்தது...
போதுமடி பெண்ணே,
தலைமுறைக்கும் தலைகுனிந்தது...
இதுவல்லவா இல்லச் சமத்துவம்...
இல்லை இல்லை 
இதுதான் இல்லா சமத்துவம்...
இங்கே இல்லாள் சமத்துவம்...

எழு...

வா... விழிதிற வா...
வா... விடியுது வா....
நம் கனவுகள் ஆயிரம் கலையட்டுமே...
வரும் இரவினில் மறுபடி தொடரட்டுமே...
வா... தொடர்கதை வா...
வா... தொடங்குது வா...
மேல்வானம் தாண்டி பறப்போமே...
தடைநூறாயிரம் உடைப்போமே...
அந்த இடிகளை கொண்டு முரசறைவோம்....
சிறு மின்னல் கொண்டு ஒளிகொடுப்போம்...
வா வா வா... தோழா,,,,
வெண்ணிலவின் சட்டை பிடிப்போம்...
ஒருநூறாயிரம் சாயம் அடிப்போம்...
சிறுகுடுவை கொண்டு நிலவை அடைப்போம்...
வா வா வா... தோழா....

சனி, 14 அக்டோபர், 2017

தெருவிளக்கு...


வீதிகளின்,
இருண்ட,
விதிகளை,
மாற்றி,
எழுதும்,
ஒளிப்பேழை...

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

கல்வி...

கரும்பலகையில்,
கைகள்,
எழுதிடும்,
அவரவர்,
விதி...

கால்பந்து...

உதைத்தாடும்,
வீரர்களின்,
ஒரே,
காற்றடைத்த,
உலகம்...

வானூர்தி...

மனிதனை,
பறக்க வைத்த,
அறிவியல்,
பருந்து...

ஆட்டோ...

தடம்மாறிய,
எறும்பின்,
தறிகெட்ட,
முன்பின்,
முரணான,
ஓட்டம்...

ரயில்...

ஓர்திசையில்,
அணிவகுக்கும்,
விஞ்ஞான 
எறும்புகளின்,
சீரான 
பயணம்...

கல்லறை (2)...

இறந்தபின்,
உருவான,
நிரந்தர,
சொந்தவீடு...

கல்லறை (1)...

மண்ணுலகை,
விட்டுபிரிந்த,
குற்றத்திற்கு,
தண்டனை,
தனிமை,
சிறைச்சாலை...

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

நம்பிக்கை...

பல இறகுகள் தானே,
பறவையின் சிறகு...
உயரப்பறந்திட சிறகை,
விரித்திட பழகு...
இந்த வானினை முழுதாய்,
அளவிட வா வா...
அதில் நட்சத்திரங்கள்,
பிடிபடும் வா வா ...

இனி மின்மினி 
வெளிச்சம் 
போதா தென்றால்...?
நிலவை கொஞ்சம் 
சிறை யெடுப்போம்...
அந்த நிலவின்
ஒளியும் 
போதாதென்றால்...?
விண்மீன் கூட்டம் 
பிடித்திடுவோம்....

இந்த இரவுகள் யாவும்,
தொடர்கதை...
மெல்ல விடிந்திட நீங்கும்,
விடுகதை...
இந்த நம்பிக்கை 
ஒன்றேபோதும்,
வாழ்ந்திடத்தான்...
இனி வாழ்கின்ற,
காலம் யாவும்,
வென்றிடத்தான்...

சவப்பெட்டி...

முடிவுறா,
துயில்,
கொள்ளும் 
அறை...

சந்திப்பு!!!

என் விழிகளில்,
நீ வீழ்ந்ததும்...
என் இமைகளும்,
கூட மறந்ததே...

உன் மொழிகளை,
நான் கேட்டதும்,
மெல் இசையினை,
செவி துறந்ததே...

அருகில் வராதே,
சுவாசிக்க மறப்பேனோ???
அருகில் வராதே...
நிலைதவறி வீழ்வேனோ???

புதன், 13 செப்டம்பர், 2017

மனசாட்சி (2)...

பசியால் வாடிய 
வயிற்றின் கண்முன்னே 
வளியவன் உண்டதில்,
வீழ்ந்தது மனசாட்சி...

சாலை விபத்தினில் 
சிந்திய உதிரத்தில்,
உதவாது சென்றதில்,
வீழ்ந்தது மனசாட்சி...

உரிமை இழந்தவன்,
அழுகுரல் கேட்டினும்,
செவிடனாய் வாழ்ந்ததில்,
வீழ்ந்தது மனசாட்சி...

தம்பிள்ளை வாசிக்க,
ஊர்ப்பிள்ளை வீசியசெய்தி,
தாளினை வாசிக்கையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

பிறர்கூறும் சொல்கேட்டு,
பொய்புரட்டை எண்ணாது,
புறம்பேசிய நாவினில்,
வீழ்ந்தது மனசாட்சி...

மனைவியின் சொல்கேட்டு, 
பெற்றோரை புறந்தள்ளும்,
பிள்ளையின் செய்வினையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

கல்விக்கு விலைவைத்து,
காசுக்கு விற்றிட்ட,
கயவரின் வஞ்சனையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

வாக்கிற்கு பணம்வாங்கி,
வஞ்சகரை தேர்ந்தெடுத்த,
கறைபடிந்த கைகளில்,
வீழ்ந்தது மனசாட்சி...

காதலை பேணாது,
சாதிய கொலைசெய்யும்,
சாக்கடை புழுக்களால்,
வீழ்ந்தது மனசாட்சி...

பெண்ணியம் போற்றாது,
ஆண்மகனாய் வாழாது,
பெற்ற வரதட்சணையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

கடமையை மறந்திட்டு,
கண்மூடி விலைபேசி,
சன்மானம் கேட்டதில்,
வீழ்ந்தது மனசாட்சி...

நோயுற்ற மனிதரை,
காக்கின்ற சேவைக்கு,
விலைவைத்த மருத்துவரில்,
வீழ்ந்தது மனசாட்சி...

பேருணர்வினில் எழுதிட்ட,
கவிதையை நுகராமல்,,
கடக்கின்ற மூடரால்,
வீழ்ந்தது மனசாட்சி...

எங்கே தேடுவேன்,
வீழ்ந்த மனசாட்சியை...???
எப்படி எழுப்புவேன்,
வீழ்ந்த மனசாட்சியை...???

மனசாட்சி (1)...


விழிமூடி தூங்கியே,.
விடையாவும் தேடட்டும்...

புரிகின்ற வேலையில்,
இமைரெண்டும் விரியட்டும்...

உணர்கின்ற வேலையில்,
உள்ளங்கள் உறையட்டும்...

வழிந்தோடும் கண்ணீரில்,
வன்மங்கள் கரையட்டும்...

மனிதத்தின் மாண்புகள்,
மனதிலே வளரட்டும்...

பிழையான தருணங்கள்,
மண்ணிலே புதையட்டும்...

மனிதனை மாற்றியே,
மானுடம் சிறக்கட்டும்...

மனசாட்சி இவ்வண்ணம்,
உலகினை மாற்றட்டும்...

வியாழன், 7 செப்டம்பர், 2017

அரசியல் போராட்டம்...

வீதியில் இறங்குவார்,
வேடிக்கை பார்ப்பார்,
கூச்சல் இடுவார்,
கும்மாளம் அடிப்பார்...

கைஅசைப்பார், புன்னகைப்பார்,
பார்கேட்க பகுத்தறிவை,
பறைசாற்றுவார்...
பாமரனின் நண்பனென,
நன்நடிப்பார்...

போருக்கு அழைத்திடுவார்,
புறப்பட்டு வாயென்பார்,
சமத்துவம் தானென்பார்,
சதிசெய்து சாகடிப்பார்...

வீதியில் உழைத்திடுவார்,
குடிசையில் கைநனைப்பார்,
கும்பிட்டு கைகுடுப்பார்,
குற்றம் பலசெய்திடுவார்...

பேருக்கொரு ஆணை இடுவார்,
நாற்திசையில்  சிலைவைப்பார்,
பூட்டிட்டு காத்திடுவார், பின்சிலையுடைத்து 
போர்போரென உணர்வெடுப்பார்...

பொதுச்சொத்தை நாசம் செய்வார்,
பொல்லாங்கு இதுவென மோசம்செய்வார்,
பொய்ப்புரட்டில் நால்வர்ணம் பூசிடுவார்.
வெற்றி வெற்றி என ஆர்பரிப்பார்..
வென்றது சனநாயகமென கொக்கரிப்பார்...

கேட்பதும் கிடைக்காது,
சொல்வதும் விளங்காது,
அறிவித்த போராட்டம்,
அரைநாளில் முடிவுறும்.
வெளிச்சம் விழும்முன்,
விட்டிலாய் ஓட்டமெடுப்பார்...
இவர்களல்லவா போராளிகள்!!!
இதுவல்லவா போராட்டம்!!!

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

புதிய இந்தியா...

மூச்சறுந்து  மடியும் பச்சிளங்கன்று,
இல்லையென வாதிடுவார் மூடர் நின்று...
மாநிலத்தேர்ச்சி பெறும் பெண்மை ஒன்று,
மருத்துவம் இல்லையென்பார் திருடர் நின்று...
உழவெங்கள் தொழில் என்பார்இன்று,
அவர் குறைகேட்கமாட்டார் செவிடாய் நின்று...
பசுக்களை தெய்வம் என்பார் இன்று,
காசுக்காக கொல்வார் தொழில் தர்மம் என்று...
ஏழ்மை எங்கும் இல்லையென்பார் இன்று, 
ஏழைகளை கொல்லும் விஷமாய் நின்று...
வளர்ச்சி வளர்ச்சி என்றுரைப்பார் இன்று,
தினம் புதிய புதிய வரியாய் நின்று...
கருப்பு பணம் ஒழிப்போம் என்பார் இன்று,
களவாணி கூட்டமோடு ஒன்றாய் நின்று...
நாளொருவண்ணம் பிறந்ததென்பார் நின்று,
அறுவை சிகிச்சையில் புதிய இந்தியா இன்று...
வலிபொறுக்காமல் துடிக்கிறாள் தாயவள்..
பாலின்றி சாகிறாள் சேயவள்...
போதுமடா இந்த புதிய சிகிச்சை...
போதுமடா மீண்டும் புதிய பிறப்பு...

பசுந்தெய்வம்...

பசுக்கள் 
தெய்வம்...
கொன்று 
தெய்வத்திடம் 
அனுப்பிவிடு...
ஏனெனில் 
இது 
மனிதக்காடு...

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

முரண்...

காற்றில் ஏறி செல்லும் மேகம்,
வானின் மீது காதல் கொள்ளும்...
ஊடல் கொஞ்சம் மாறி போக...
வானம் இருளாகும்...
பிரிந்து சென்ற மேக கூட்டம்,
அழுது கொஞ்சம் ஆற்ற பார்க்கும்,
பிரிவு நோயின் அழுத்தம் கூட,
காணாமல் கரைந்தோடும்...
முகமுடிகள் மாற்றிபார்த்தும்,
மனவெளியில் மாற்றல் இல்லை...
முழுதாக தொலைந்த,
மேகம் போலானேன்...
வான்வெளியில் விரியாச்  சிறகு,
மரக்கொடியில்  காயும் சருகு,
இவை ரெண்டும் சேரும்,
சகதியில்  வீழ்ந்தேனே... 

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பாரதிரவாழ்...

தினம் நான்மணி குரல்மேவிடும்,
குன்றாடிடும் கொடியோன் - உடன் 
எழுக்காலையில் கடன்யாவையும் 
கதிராண்டவன் கரம்நீட்டு முன்செய்வாய்...

நீர்பூசிடு  நிலை நெற்றியில்,
துதிபாடிடு நுனிநாவினில் - எழு 
பிறப்பிலும் எனை ஆண்டவன்
உடன்வர தினம் துதிப்பாய்...

குடலிரண்டும் பசியாறிட குரல்
வளையினில் ஸ்வரமாடிட - எடு 
வாளினை துயர் ஆற்றிட 
அழிப்பாய்,அகல் விளக்காய்...

திசையெட்டிலும் விதிமாற்றிடு,
அறம் யாவிலும் வினையாற்றிடு - நல் 
விதிசெய்திடும் விதை யாகிடு,
வாழ்வாய், பார் அதிர வாழ்வாய்...

புதன், 16 ஆகஸ்ட், 2017

புதிய ஆத்திச்சூடி!!!

அரசியல் படி.
ஆபத்தானது அணுசக்தி.
இயன்ற மொழிகளை கல்.
ஈந்து சிவக்கட்டும் கை.
உழவனை ஆதரி.
ஊரணிகளை காத்து நில்.
எருது பேணி வளர்.
ஏய்ப்பவனை அழி.
ஐயத்துடன் அயலான் அணுகு.
ஒருமுறையேனும் மேடையேறி பழகு.
ஓங்கியடி ஒடுக்குபவனை.
ஒளரதன் ஆளட்டும். 

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

புதிய தமிழ் ஆத்திச்சூடி!!!

அரசியல் படி 
ஆபத்தானது அணுஉலை
இந்தி திணிப்பை எதிர் 
ஈகையில் சிறந்தோர் தமிழரே.
உழவனை ஆதரி 
ஊரணிகளை காத்து நில்.
எருதுகளை பேணி வளர்.
ஏய்ப்பவனை அழி.
ஐயத்துடன் அயலார் அணுகு.
ஒட்டுக்குடி மனிதரல்ல.
ஓங்கியடி ஒடுக்குபவனை.
ஒளரதன் ஆளட்டும்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

மின்விசிறி...

அந்தரத்தில்,
தொங்குதம்மா,
மூணுரெக்க,
சாதனம்...

வட்ட வடிவில்,
சுற்றும்போது,
மாயக்கண்ணன்,
சக்கரம்...

அதன்,
குடையில் அமர்ந்து,
காற்று வாங்க,
வியர்வை துன்பம்,
போகுமே...

மின்,
விசிறி போலே,
உதவி செய்து,
நாமும் வாழ்வோம்,
நாளுமே!!!

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

நம்பிக்கை...

இரு கண்கள் நமக்கு,
கனவுகள் காண,
கண்ணீர் எதற்காக???
எதிர்காலம் நமக்கு,
காத்து கிடக்கு,
விதைப்போம் உழைப்பாக...

நாம் போகும்போது,
உடன்வரும் மேகம்,
தாகம் தீர்க்கத்தான்...
இனி கவலை துறந்து,
வானை அளப்போம்,
பருந்தை போலத்தான்...

தினம் விழுமே பல விதைகள்,
அதில் உயிர்க்கும் சில செடிகள்,
இந்த நம்பிக்கை ஒன்றேபோதும் 
வாழ்ந்திடத்தான்...

நாம் போகும் பாதை நீளம்,
ஆனால் தூரமில்லை...
போகத்துணிந்தால் வாழ்க்கை 
இங்கே பாரமில்லை...
உன் எண்ணம் அதை நீ மாற்று...
தினம் சுவாசி புதுவேட்கை காற்று...
இனி விண்மீன் போலே,
வாழ்வோம் அந்த வானின் மேலே...   
நம் வெளிச்சம் போதும் பூமி சிரிக்கும் 
இரவுக்குடையின் கீழே...   (இரு கண்கள்)

தத்தி தாவும் கால்கள் 
இருந்தால் ஓடிடுவோம்...
சிறு நத்தை ஆனால் நாளும்,
வழியில் ஊர்ந்திடுவோம்..
வழி தேடத்தானே கால்கள் நமக்கு...
வலிக்காமல் இங்கே வாழ்க்கை எவர்க்கு???
நம்பயணம் முடியும் முன்னே
புதுஉலகம்  காண்போமே...    
அதில் மற்றோர் கால்கள் பயணத்தானே,
பாதை அமைப்போமே...  (இரு கண்கள்)

வியாழன், 20 ஏப்ரல், 2017

முதுமை... புதுமை...

மெல்ல, எழுந்து வாடா...
இந்த உலகம் உனக்கு வீடா...
விதி மாத்த வாடா...

எல்ல தாண்டி வாடா...
முடி நரைச்ச காளைமாடா...
வேட்டி மடிச்சு வாடா...

அறுபது வயசுல,
புதுஆட்டம் போடு...
மூணு இருபதா நெனச்சினீ,
பாட்டம் பாடு...
இந்த பூமி தானே பழசு...
நம்ம மனசு என்றும் புதுசு...
விதி மாத்தி வாடா... 

கட்டையில போகும் காலம்,
கட்டைவண்டி ஓட்டலாம்...
கானக்குயில் பாட்டு கேட்டு,
காடுமேடு பாடலாம்...

ஆத்துமணல் அள்ளிவீசி,
நாலுப்பூர ஆடலாம்...
கம்மாயில தண்ணிவந்தா,
மூச்சி முட்ட ஓடலாம்...

(மெல்ல எழுந்து வாடா...)

கனா...

இமை திறந்து மூடும் முன்னே,
இதயத்தில் வந்தாயே...
இதழ் திறந்து பேசும் முன்னே,
எங்கோ பறந்தாயே...

உறங்கும் நேரம், 
கனவில் வந்து
கதைகள்நூறு சொன்னாயே...
உறக்கம் கலைந்து, 
உன்னை காண,
ஏனோ மறைந்தாயே...

சுவாசிக்கிறேன், 
உன்காற்றை நானும் மெல்ல சுவாசிக்கிறேன்...
வாசிக்கிறேன், 
என்பேரை எழுதி உன்னை வாசிக்கிறேன்...

இருபத்தைந்து, வருடம் தாண்டி,
அழகு புயலாய் வந்தாயே...
இரண்டு நொடியில், மனதில் வீசி,
இரவல் வாங்கி சென்றாயே...
காதல் கீற்று தந்த காயம் நீயடி...
ரணம் ஆற நின்று கொஞ்சி பேசடி...

நேசிக்கிறேன்,
எண்ணில் காதல் செய்த மாற்றம் நேசிக்கிறேன்...
யோசிக்கிறேன்,
எனக்கென்ன வாகுமென்று யோசிக்கிறேன்...

ஆசை நூறு, என் ஆயுள் நூறு,
அருகில் நீயும் வந்தாலே...
அழிந்திடாத கோலம் ஒன்றை,  
மனதில் ஒட்டி சென்றாயே..
எந்தன் நெஞ்சம் யாவும் வெள்ளை தாளடி..
அதில் காதல் வர்ணம் நீயும் தீட்டடி...

சுவாசிக்கிறேன், 
உன்காற்றை நானும் மெல்ல சுவாசிக்கிறேன்...
வாசிக்கிறேன், 
என்பேரை எழுதி உன்னை வாசிக்கிறேன்...

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

விடியல்...

பகல் இரவுகள் 
யாவும் தொடர்கதை...
அதில் விண்மீன் 
வெளிச்சம் விடுகதை...
இது விடியல் 
தேடிடும் மனதா???
உயர பறக்க 
தூண்டிடும் சிறகா???
இந்த வானம் பூமியும் 
புதிதாய் பிறக்குது வா வா...
இதில் எளியோர் வறியோர் 
வாழச்சொல்லுது வா வா...

திங்கள், 13 மார்ச், 2017

அவள் கண்கள்..


மழையே மெல்ல எட்டி பாரு,
வானம் விட்டு மெதுவாய்...
அலையே கொஞ்சம் தொட்டு பாடு,
கரையில் கால்கள் சுகமாய்...
பனியே, விரல் தொட்டு பூக்கும்,
மலர்கள் எல்லாம் புதிதாய்...
சிறகே வந்து வட்டம் போடு,
பூமி மேலே அழகாய்...

இது புதிதாய் பூத்த நொடிகளா?
இரு இமைகள் அடைத்த மொழிகளா??
அடை மழையில் நனைந்த விழிகளா?
ஏதோ புரியவில்லை...

புது உணர்வுகள் புதிதாய் பூக்குதே...
இந்த அனலில் உடலும் சிலிர்க்குதே...
என் அணுக்கள் விடையை கேட்க சொல்கிறதே...
சொல்! சொல்! சொல்! நீயே சொல்!...

உன் ஒற்றை பார்வை தீயடி...
உயிர் மெல்லச்சாகும் நோயடி...
இந்த வலிகள் ஏனோ வாழச்சொல்கிறதே...
சொல்! சொல்! சொல்! நீயே சொல்!...

ஞாயிறு, 12 மார்ச், 2017

வெற்றிடம்...

வளையாத பேணா முட்கள்,
வரைந்திட்ட காணா சொற்கள்,
காகித வெற்றிடம்...

வியாழன், 9 மார்ச், 2017

ஆதவமகன்...

ஆதவன் அங்கம் அவனுடலணிய  
அவனியில் அவனும் அவதரித்தான்...
அன்னையும் அன்பினை அளிக்காது,
ஆற்றினில் அவனை அர்பணித்தாள்...
ஆற்றலை அடைந்திட அறவழியின்றி, 
ஆண்டவன் அடியை அடைந்திட்டான்...
ஆற்றல் ஆளுமை அவனிடமாக,
அவனியே அஞ்ச ஆர்பரித்தான்...
அன்னையும், அனைவரும் ஆறுதலின்றி,
ஆநிரை ஆண்டவன் அடிசேர்ந்தார்...
அதிசய ஆண்டவன் அவனெதிராக,
அங்கம் அறுத்து அன்பளித்தான்...
அக்கினி அழகன் அவனின்றி,
அத்தோழனும்  அன்றே அழிந்திட்டான்...
ஆதவமகன் அவன் அடையாளம்,
அகிலம் அவன்பின் அறிந்திட்டான்...